முடிச்சு அவிழ்கின்றது . <script language='javascript' src='http://ping.thenkoodu.com/ping_comments.php?posturl=https://dravidamuslium.blogspot.com/2008/04/blog-post_19.html&postid=5194692351900014930&blogurl=https://dravidamuslium.blogspot.com/2008/04/blog-post_19.html&cmt=1' type='text/javascript'> </script> ~ திராவிட முஸ்லிம்

Saturday, April 19, 2008

முடிச்சு அவிழ்கின்றது .

நினைவில் நின்றவை...

இறைவன் எங்கென்று என் குருவிடம் - கேட்டேன்
இதயத்துள் புகுந்து பாரென்று - சொன்னான்

உலகத்தை இறைவன் படைத்ததேன் - என்றேன்
அறியும் பொருட்டு தனைதான் - என்றான்

ஆதம் ஏன் குற்றம் செய்தார் - என்றேன்
இறைவன் அருளுக்கது வழிகோல - என்றான்

சாத்தானை இறைவன் படைத்ததேன் - என்றேன்
சாரற்ற கனிகளைப் பிரித்திட - என்றான்

தலைவிதி என்பது என்னவென்று - கேட்டேன்
தலை கனத்தாடுவோர்க்கு எச்சரிக்கை - என்றான்

வாழ்க்கை என்பது என்னவென்று - கேட்டேன்
வாண வேடிக்கை சில நொடி - என்றான்

மரணம் என்பது என்னவென்று - கேட்டேன்
முரணான செயலுக்கு முடிவுரை - என்றான்

அறிவு என்பதை விளக்குங்கள் - என்றேன்
அறியாமல் இருப்பதே முழு அறிவு - என்றான்

தெளிவு என்பது எப்போது - என்றேன்
தன்னையே அறிந்தபின் வரும் அது - என்றான்

இருவிழி பார்வையோ ஒன்று ஏன் - என்றேன்
இருப்பது யாவுமே ஒன்றெனச் - சொன்னான்

சோதனை என்பது என்னவென்று - கேட்டேன்
வேதனை அடங்கிய இறை நெருக்கம் - என்றான்

தண்டனை என்பது என்னவென்று - கேட்டேன்
கண்டித்து செயல்களை வழிமாற்ற - என்றான்

நல்லோர்க்கே நோய்நொடி அதிகமேன் - என்றேன்
நாவினில் அவன் பெயர் நிலைத்திருக்க - என்றான்

சான்றோர்க்கு பொருட்செல்வம் ஏனில்லை - என்றேன்
சீரழிக்கும் கருவிகள் நமக்கேன் - என்றான்

"கலிமா"வின் உட்பொருள் என்னவென்று - கேட்டேன்
இல்லாமல் உணர்தல் இருப்பதை - என்றான்

மெளனத்தில் மூழ்குவது எவ்வாறு - என்றேன்
கண்ணுடன் எண்ணமும் மூடிவிடு - என்றான்

பாவங்களில் மட்டுமேன் வசீகரம் - என்றேன்
பார்வைகள் பகட்டினில் பதிவதால் - என்றான்

இறைஞானம் கிட்டுவதில் சிரமமேன் - என்றேன்
விரைவாய்க் கிடைப்பது விரயமாகும் - என்றான்

இறைகிருபை இருந்தும் அச்சமேன் - என்றேன்
உயிருடன் கலந்து உடலிருப்பதால் - என்றான்

சொர்க்கம் நமக்குக் கிடைக்குமா - என்றேன்
சொர்க்க அதிபதியைப் பிடிக்க முயல் - என்றான்

தொழுகையின் அர்த்தம் என்னவென்று - கேட்டேன்
வாழ்வதற்குப் பயிற்சி தரணியில் - என்றான்

"ஜகாத்" ஏன் தரவேண்டும் - என்றேன்
ஜகத்தில் வறுமை இல்லாமலாக்க - என்றான்

நொன்பின் மாண்பை விளக்குங்கள் - என்றேன்
நாயனை நெருங்கும் நல்லருள் - என்றான்

"ஹஜ்" ஜின் அவசியம் சொல்லுங்கள் - என்றேன்
அனைவரும் ஒன்றென உணர்த்த - என்றான்

"கிப்லா"வை நோக்கியே தொழுவதேன் - என்றேன்
சக்கரம் சுழல ஒர் அச்சாணி - என்றான்

இறுதிநாள் தீர்ப்பின் பொருளென்ன - என்றேன்
தேர்வின் முடிவைத் தெரிவித்தல் - என்றான்

ஒன்றுக்கு ஒன்றேன் முரண்பாடு - என்றேன்
ஒவ்வொன்றிலும் ஒன்று இருப்பதால் - என்றான்

அலைமோதும் மனதைப் பெற்றதேன் - என்றேன்
வலைவீசும் உலகை விலை பேச - என்றான்

புலனைக் கொண்டு நாம் அறிவதென்ன - என்றேன்
புலன் கடந்து ஒன்றிருப்பதை உணர்த்திட - என்றான்

1 comment:

Anonymous said...

Nice...keep it up