இயக்க வெறியும் இஸ்லாமும் ~ திராவிட முஸ்லிம்

Monday, May 19, 2008

இயக்க வெறியும் இஸ்லாமும்

அல்லாஹ் கூறுகிறான்:

இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றி பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள்.

(அல்-குர்ஆன் 3: 103)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் உங்களை வெள்ளைவெளேர் என்ற வெளிச்சத்தில் விட்டுச்செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றது என்று கூறினார்கள்.

எந்த வகையிலும் இந்த சமுதாயம் பிரிந்து விடக்கூடாது என்பதில் மிக கவனமாக நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். எந்தளவுக்கு என்றால் பள்ளியில் ஒரு இமாமை பின்பற்றி ஜமாத்தாக தொழவரும் தோழர்கள் பல பிரிவுகளாகப் பிரிந்திரிப்பதைக் கண்டு உங்களுக்கு என்ன வந்து விட்டது? நீங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து அமர்ந்திருப்பதைக் காண்கிறேன் என்று கண்டித்தார்கள். அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு ஸமீரா(ரலி) ஆதாரம்: முஸ்லிம்

ஜிஹாத் செய்வதற்காக புறப்பட்ட ஸஹாபாக்கள், ஓய்வு நேரத்தில் தனித்தனியாக தங்குவார்கள். இதைக்கூட நபி(ஸல்) அவர்கள் விரும்பவில்லை.

அபூசா அல்பா(ரலி) அறிவிக்கின்றார்கள் ஜிஹாதில் கலந்துகொண்ட ஸஹாபாக்கள் முகாமிட்டபோதெல்லாம் தங்கள் வசதிக்காகத் தனித்தனியாக தங்குவார்கள். இதைக்கண்ட நபி(ஸல்) நீங்கள் இவ்வாறு பிரிந்திரிப்பது ஷைத்தானின் யுக்திகளில் ஒன்றாகும் என்று எச்சரித்தனர். இந்த எச்சரிக்கைக்குப் பிறகு முஸ்லிம்கள் எங்கே முகாமிட்டாலும் சேர்ந்தே இருப்பார்கள். சேர்ந்து நெருங்கிப் படுத்தே ஓய்வெடுப்பார்கள், எந்த அளவிற்கு நெருங்கிப் படுத்திருப்பார்கள் என்றால் ஒரே போர்வையைக் கொண்டே அவர்களைப் போர்த்திவிடலாம். (ஆதாரம்: அபூ தாவூத்)

ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயம் எந்த காரணத்திற்காகவும் பல பிரிவுகளாக பிரிந்து விடக்கூடாது என நபி(ஸல்) பலமான தடுப்பு சுவரை கட்டி வைத்துவிட்டே சென்றுள்ளார்கள். ஆனால் இன்றைய முஸ்லிம்களாகிய நாம் மத்ஹபுகள் பெயரிலும், தரீக்காக்கள் பெயரிலும், இயக்கங்கள் பெயரிலும், நபி(ஸல்) அவர்கள் கட்டிக்காத்த சுவரை இடித்து தரைமட்டமாக்கி கொண்டிருக்கிறோம்.

உம்மத்தன் வாஹிதா:


அல்லாஹ் கூறுகிறான்:

நிச்சயமாக உங்கள் உம்மத் - சமுதாயம் - (பிரிவுகளில்லா) ஒரே சமுதாயம் தான்.. (அல்-குர்ஆன் 21: 92) என்று பறைசாற்றுகிறான்.

மேலும் கூறுகிறான்:

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள். இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்; (அல்-குர்அன் 3: 10).

அல்லாஹ்வை திடமாக நம்பும் இந்த உம்மத்தவர்களைப் பார்த்து மேன்மைமிக்க சமுதாயம் என்கிறான்

இதே முறையில் நாம் உங்களை ஒரு நடுநிலையுள்ள உம்மத்தாக (சமுதாயமாக) ஆக்கியுள்ளோம். (அப்படி ஆக்கியது) நீங்கள் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், ரஸூல் (நம் தூதர்) உங்கள் சாட்சியாளராக இருப்பதற்காகவுமேயாகும்; ... (அல்-குர்ஆன் 2: 143).

நம்மை நடுநிலை சமுதாயம் என்றும் புகழ்ந்தும் கூறுகிறானே!. அதற்கு தகுதியுடயவர்களாக நாம் இருக்கிறோமா? பலவாறாக பிரிந்து சிதறிய சமுதாயத்தை வல்ல அல்லாஹ் ஒன்றுபடுத்தி இனி பிரியக்கூடாது என எச்சரித்தபின்பும் அலட்சியம் செய்து உலகெங்கும் முஸ்லிம்களே முஸ்லிம்களை அடித்து சாகும் நிலை எதனால் ஏற்பட்டது.

கண்ணாடி போன்றவர்:


ஒருவர் முஃமினாக இருக்கக்கூடிய நிலையில் சமுதாயத்தை பிரிக்கவோ, சமுதாயத்தை விட்டு பிரிந்து நிற்கவோ ஒருபோதும் எண்ணமாட்டார். ஏனெனில். ஒரு முஃமின் மற்றொரு முஃமினுக்கு கண்ணாடி போன்றவர் என்றும் ஒரு முஃமின் மற்றொரு முஃமினின் உடம்பை போன்றவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

ஒரு முஃமினுக்கும் மற்றொரு முஃமினுக்கும் உள்ள தொடர்பை எந்தளவிற்கு ஆணி அடித்தாற் போல் நபி(ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். இதை இந்த சமுதாயத்திலுள்ள தலைவர்கள் சிந்திக்க வேண்டாமா?

கருத்து வேறுபாடு:


உண்மையான ஒற்றுமை என்ன என்பதை உணர்வதும், உணர்த்துவதும் அவசியமாகும். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டளைகளுக்கு மாற்றமாக, பெரியோர்கள், இமாம்கள், முன்னோர்கள் சொல்படி பிடிவாதமாக செயல்படும் முஸ்லிம்கள், அவர்களுக்குள் எவ்வளவு பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும், சண்டை சச்சரவுகள், கொடுக்கல், வாங்கல் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுடன் மூன்று நாளைக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது. (ஹதீஸ்).

குரோதம் களைந்து ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ஆனால் தற்போது நம்மவர்கள் கொள்கை விஷயத்தில் ஏற்படும் சிறுசிறு விஷயத்தைக்கூட மலையளவு பெரிதுபடுத்தி ஆத்திரப்படும் அளவுக்கு பிரச்சனைகளை உருவாக்கி கருத்து வேறுபாடு உள்ளது என்று கூறியே நிரந்தரமாக பிரிந்து விடுகின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்கூட இஸ்லாம் கருத்து வேறுபாட்டை களைந்து ஒற்றுமையுடன் வாழ வழிவகுக்கின்றது. ஸஹாபாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடுகளும், காரசாரமான வாதங்களும், சச்சரவுகளும் ஏற்பட்டாலும் அதைத் தீர்த்து ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள், பிரிந்துவிடவில்லை.

இப்னு உமர்(ரலி) அவர்கள் 'ஹஜ்ஜாஜு பின் யூசுப்' என்னும் மிகக்கொடிய அநியாயம், அக்கிரமம் செய்து கொண்டிருந்தவனுக்குப் பின்னால் தொழுதுள்ளார்கள். என்று இமாம் புஹாரி(ரஹ்) அவர்களும் அபூ ஸயீதில் குத்ரி(ரஹ்) அவர்கள் பெரும் குழப்பவதியாக இருந்த மர்வான் என்பவருக்குப் பின்னால் பெருநாள் தொழுகை தொழுதுள்ளார்கள் என்பதாக இமாம் முஸ்லிம்(ரஹ்) அவர்களும் மற்றும் திர்மிதி, அபூதாவூத், நஸயி, முதலியோரும் தமது நூல்களில் வெளியிட்டுள்ளார்கள். ஆக ஸஹாபாக்கள் மத்தியில் சமுதாயத்தை பிரித்து உடைத்தெரியும் விஷயத்தில் கடுகின் முனையளவு கூட விரும்பக் கூடியவர்களாக இல்லை.


அல்லாஹ் கூறுகிறான்: எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவினர்களாக பிரிந்து விட்;டனரோ (அவ்வாறு ஆகிவிட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள். (அல்-குர்ஆன் 30: 32)

இன்றே முஸ்லிம்கள் ஒன்றுபட வேண்டும். நம்மவர்களிளேயே சிலர் இக்கால கட்டத்தில் அது சாத்தியமில்லை என்று விமர்சிப்பது குறுகிய மனப்பான்மையைக் காட்டுகின்றது. அனைத்து முட்டுக்கட்டைகளையும் தகர்க்க வேண்டும். முஸ்லிம்கள் எங்கு வாழ்ந்தாலும் ஒரு குறிப்பிட்ட இடங்களில் ஒன்றுபட தடையாக இருப்பவைகளை உடைத்தெரிய அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுபட வேண்டும். இனி ஒற்றுமையை வெற்று முழக்கங்களாலும், வெறும் கோஷங்களாலும் உருவாக்க முடியாது. உழைப்பு மற்றும் முயற்சியால் மட்டுமே உருவாக்க முடியும்.

யாஅல்லாஹ்! நாங்கள் அனைவர்களும் முழு இஸ்லாமிய வாழ்க்கையில் நுழைந்திடவும், குர்ஆன், ஹதீஸை வாழ்க்கையின் துணையாக அமைத்து வழி நடத்திய சத்திய ஸஹாபாக்கள் எப்படி செயல்பட்டார்களோ அதன்படி நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்து இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றம் பெற அருள் புரிவாயாக.

No comments: